புதுடில்லி, ”மிக வேகமாகவும், இயந்திரமயமாகவும் செயல்படும் தற்போதைய கால கட்டத்தில், 10ல் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், விரக்தி உள்ளிட்ட மன ரீதியிலான பாதிப்பு உள்ளது,” என, தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
மோசமான நிலை
மன நலம் பாதிப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கு, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா பேசியதாவது:
நாடு முழுதும் உள்ள, 47 மனநல மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி வரை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மருத்துவமனைகளில் நேரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, நாடு முழுதும், 2,000க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் முழுமையாக குணமடைந்தும், மருத்துவமனைகளிலேயே இருக்கின்றனர்.
இவர்கள் குணம் அடைந்த பின் ஒருநாள் கூட மருத்துவமனையில் கூடுதலாக தங்க கூடாது.
இருந்தும் இவர்கள் மருத்துவமனையிலேயே சுற்றித்திரிகின்றனர். இதில், 50 சதவீதம் பேர், மேற்கு வங்கத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் உள்ளனர்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் உரிய வசதிகள் இல்லை, சுகாதாரம் பேணப்படுவதில்லை, டாக்டர்கள் – ஆலோசகர்கள் இருப்பதில்லை, மோசமான நிலையில் நோயாளிகள் நடத்தப்படுகின்றனர் என்ற குறைபாடுகள் உள்ளன.
மனநோயில் இருந்து மீண்டவர்களை மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ப்பதற்கான முயற்சியும் நடக்கவில்லை. இதில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட மனநல மருத்துவ சட்டத்தின்கீழ், மாநில அளவில் மனநல மருத்துவ சேவை ஆணையங்கள் உள்ளிட்டவை, பெரும்பாலான மாநிலங்களில் அமைக்கப்படவில்லை.
தற்போதைய காலகட்டத்தில், நாம் ஒவ்வொருவரும் பலவித சவால்களை சந்திக்கிறோம். மிகவும் வேகமானதாக, இயந்திரத்தனமானதாக வாழ்க்கை முறை மாறிஉள்ளது.
உள்நாட்டு பிரச்னைகளுடன், சர்வதேச பிரச்னைகளும் சேர்ந்து, மக்களின் மன நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மனச்சோர்வு
மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, விரக்தி போன்ற மனநல பாதிப்புகள், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது. 10ல் ஒருவருக்கு ஏதாவது ஒருவகையில் மன ரீதியிலான பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், 13,000 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். சிறைகள், ராணுவப் படைப் பிரிவுகள், முதியோர், அலுவலகங்கள் என, எங்கும் இந்த மன பாதிப்புகள் பரவிஉள்ளன.
இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்