வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா (எஸ்.கே.மிஸ்ரா) பணிக்காலத்தை செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவ.,18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பணி நீட்டிப்பு வழங்கி உள்ளதாக கூறி, அவரது பணி நீட்டிப்பு சட்டவிரோதம் எனவும், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனரை பணி நியமனம் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் மிஸ்ராவின் பணிக்காலத்தை அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். ‘அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம். அமலாக்கத்துறையில் உள்ள மற்ற அதிகாரிகள் தகுதி அற்றவர்களா? எஸ்.கே.மிஸ்ரா இல்லையென்றால் அமலாக்கத்துறையே இயங்காதா?’ என கேள்வி எழுப்பினர். பின்னர் வரும் செப்.,15ம் தேதி வரை மிஸ்ராவின் பணி நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ‘செப்டம்பர் 15க்கு மேல் நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தால் ஏற்க மாட்டோம்’ எனவும் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement