நாங்குநேரி சம்பவம்.. ஆரம்பிச்சு வெச்சதே இயக்குநர் முத்தையா தான்.. எஸ்.வி. சேகர் தாக்கு

சென்னை:
நாங்குநேரியில் பள்ளி மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு சினிமாக்களே காரணம் என முன்னாள் பாஜக நிர்வாகியும், இயக்குநருமான எஸ்.வி. சேகர் கூறினார். மேலும், சினிமாக்களில் சாதி படங்களை எடுப்பதை ‘கொம்பன்’ திரைப்படம் எடுத்த இயக்குநர் முத்தையா தான் ஆரம்பித்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர் சின்னதுரை, சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த மாணவர் மட்டுமல்லாமல் அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும், இந்த கோர சம்பவத்தை பார்த்த அவரது தாத்தா, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாதிய வன்மத்தால் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதுதான் மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து எஸ்.வி. சேகரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால் நேற்று நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவனது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டி இருக்கிறார்கள். சாதிகள் இல்லைனு சொல்றோம்.. சாதியை ஒழிக்கணும்னு பேசுறோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் குழந்தையை சேர்க்க போகும் போது என்ன சாதினு கேட்குறாங்க. பிஞ்சிலேயே அந்தக் குழந்தைக்கு சாதின்னா என்னனு தெரிய ஆரம்பிக்குது.

இதைவிட முக்கியமான காரணம் சினிமாவுக்கு இருக்கு. சாதி படங்களை எடுத்ததால் வந்த வினை இது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையா தான். ‘கொம்பன்’ படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர் தான். அப்புறம் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என அதை தொடர்கிறார்கள். தன் சாதியை உயர்த்துவது தப்பு இல்லை. ஆனால் அடுத்த சாதியை தாழ்த்திக் காட்டுறதுதான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள், அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுப்பாங்களா? இவ்வாறு எஸ்.வி. சேகர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.