மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி… சஸ்பென்ஸ் மூடில் தெலுங்கு தேசம்… ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பல்டி அடிக்குமா?

2024 மக்களவை தேர்தலுக்கு களம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இதுவரை 36 அரசியல் கட்சிகள் கைகோர்த்து நிற்கின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தியா (INDIA) கூட்டணியை ஒருகை பார்த்துவிட தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியின் வியூகங்கள் பெரிதாக வகுக்கப்படவில்லை. இரண்டு கட்ட பேச்சுவார்த்தை உடன் நிற்கிறது.

மூன்றாவது அணி

இதற்கிடையில் பாரதிய ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர் ராவ் யாருடனும் கைகோர்க்க மாட்டேன் எனக் கூறி மூன்றாவது அணிக்கு வித்திட்டுள்ளார். இதே தெலுங்கு மண்ணை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு சீக்ரெட்டாக ஒரு பிளானில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வர விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி, தெலுங்கு தேசம் கட்சிக்குள் இருந்தும் அரசல் புரசலாக பேச்சு எழுந்துள்ளது.

ஆந்திர அரசியல் கட்சிகள்

ஆனால் ஒரு சிக்கல் நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு சிறந்த உதாரணம், பலமுறை டெல்லி சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை ஜெகன் மோகன் சந்தித்து பேசியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவு

இதில் மாநில நலனையும் தாண்டி சில அரசியல் விஷயங்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் ஹைலைட்டாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி அரசுக்கு எதிரான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றும் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தேசிய அரசியலில் மிக மிக முக்கியமான விஷயம்.

தெலுங்கு தேசம் பிளான்

ஆந்திராவில் செல்வாக்கு பெற்று விளங்கும் அரசியல் கட்சி, அதுவும் தென்னிந்தியாவில் பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்தியா கூட்டணி உடன் கைகோர்க்காமல் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார். மணிப்பூர் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கப்சிப் மூடில் இருந்ததாக தெரிகிறது. இதன்மூலம் ஆந்திராவில் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

மக்களவை தேர்தல் 2024

இதே நிலை தொடர்ந்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அல்லது வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம். அப்படி இருந்தால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பாஜக உடன் இணைய முடியாது. எதிரெதிர் நிலையில் இருக்கும் கட்சிகள் மத்தியில் பாஜக உடன் கைகோர்த்தால் மாநில அளவில் எப்படி அரசியல் செய்ய முடியும். இதற்கு சிறிதும் வாய்ப்புகள் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி

இந்த சூழலில் பாஜகவிற்கு ஆதரவாக நிற்பதை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் சிலர் விரும்பவில்லை என்கின்றனர். ஆனால் கட்சி தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். எனவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நகர்வை பொறுத்தே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு சிக்னல் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.