வெளுத்து வாங்கிய கனமழை… இன்னும் தொடருமாம்.. வானிலை அலெர்ட்..

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடைக்காலம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர். வெப்பத்துடன் வெப்ப அழுத்தமும் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு புழுக்கத்திற்கு ஆளானார்கள்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவி வருகிறது. வானிலை ஆய்வு மையமும் அடுத்த ஒரு வாரத்திற்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அலெர்ட் அளித்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை லேசாகத் தொடங்கிய மழை இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்தது. எழும்பூர், கிண்டி, மாம்பலம்,மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், வடபழனி என அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை விடாமல் பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெதர்மேனும் இன்று இரவு நீண்ட மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், நாளையும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை மற்றும் ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.