புதுடெல்லி: வரலாற்றில் முதல் முறையாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாக பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இதனால் இந்திய மல்யுத்த வீரர்கள் தனி கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இடைநீக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பிரிஜ் பூஷன்.
“வரலாற்றில் முதல்முறையாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தேசத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதிலிருந்து தேசம் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறோம்” என பிரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் இயங்கியவர். மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தினர். தற்போது அது தொடர்பாக வழக்கை அவர் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Former WFI president and BJP MP Brij Bhushan Sharan Singh says, “For the first time in India’s history, the Wrestling Federation of India has been suspended. This is a huge blow for the country. We pray for the country to recover from this at the earliest.” pic.twitter.com/WukCtQyjD7
— ANI (@ANI) August 25, 2023