டெல்லி: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய ரோவர் 8 மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், “திட்டமிட்டபடி ரோவர் சிறப்பாக இயங்கி வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23ம் தேதி நிலவை அடைந்தது. அன்று மாலை 6 மணி அளவில் விண்கலத்தின் லேண்டர் நிலவில் கால் பதித்ததை அடுத்து, அதில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கியது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை பத்திரமாக நிலவில் தரையிறக்கும் இஸ்ரோவின் முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவின் மேற்பரப்பில் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதோடு, ரோவர் வெளியேறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு குறித்த வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.