விஜயவாடா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பலத்த பாதுகாப்புடன் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஞாயிற்றுக்கிழமை அன்று ஊழல் தடுப்பு ஆணைய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விஜயவாடா மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஹிமா பிந்து, வாதங்களக் கேட்டு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது கைது செய்யப்பட்டதை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிறையில் அவருக்கான வசதி: 73 வயதான அவருக்கு வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவு வழங்கவும், மருந்து – மருத்துவ வசதி வழங்க மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவரை சிறையில் தனி அறையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை அவர் கொண்டிருப்பது வழக்கம்.
#WATCH | Andhra Pradesh: Amid heavy security, former CM N Chandrababu Naidu was taken to Rajahmundry Central Prison. He was sent to judicial custody till September 23 in a corruption case earlier today. pic.twitter.com/gR8jLwq6WN
— ANI (@ANI) September 10, 2023