விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைத்தோறும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்கள்மீது அதிகபட்சம் ஏழு நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாத்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வாரம் கடந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கடந்த வாரம் அளித்த மனுவின்மீதான நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுள்ளார். அதற்கு விளக்கமளித்த அதிகாரி, கோரிக்கையை நிறைவேற்றிட இன்னும் 7 நாள்கள் மட்டும் அவகாசம் தாருங்கள் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை வைத்தார்.

பதிலைக்கேட்டு சிரித்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுமீதான தாமத நடவடிக்கையைக் கண்டிக்கும்விதமாக அதிகாரிக்கு நூதன முறையில் நினைவூட்டல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைத்தோறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மொத்த செலவையும் சொந்தப்பணத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்கும்வரை இதை பின்பற்ற வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நூதன முறையில் நினைவூட்டல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக சமூக பொறுப்பு நிதியின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே சிறப்பு இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை, அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவருந்த முடியாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களுக்கு, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஹோட்டலில் சென்று சாப்பிட ‘சாப்பாடு டோக்கன்’ வழங்கப்படுகிறது. சுமார் 6 வாரங்களுக்கு முன்பிருந்தே இத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது” என்றனர்.