தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு இன்று இ–மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இதற்கு முன், தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உலக தபால் அமைப்பு 1874ல் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ல் உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,௯-௧௫) கடை பிடிக்கப்படுகிறது.
தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கம் இளைஞர்களுக்கு குறைந்து வருகிறது. இருப்பினும் உலகில், தபால்துறை ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு பயன்படுகிறது. இந்தியாவில் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை, இன்றும் தபால் துறை கையாள்கிறது. பல பரிணாமம் : பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. பின் தகவல்கள் தபால் துறை மூலமாக பரிமாறப்பட்டன.
உலகில் முதலிடம் : இந்திய தபால் துறை 1854ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராம பகுதிகளில் உள்ளன. உலகில் அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 4.33 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
வங்கி வசதி: ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது வங்கி வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement