`கொடாக்கண்டனாக இருக்கிறது கர்நாடகம்; அவர்களிடம் நாம் யாசகம் கேட்கவில்லை!' – காட்டமான துரைமுருகன்

தமிழகச் சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது முதல்வர் ஸ்டாலின், `உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு, கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்’ எனத் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

பின்னர், தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேசியக் கட்சிகள்தான் கர்நாடகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன. அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நமக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. எனவே, நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி, கர்நாடகாவிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிக்கு… அ.தி.மு.க எப்போதும் துணை நிற்கும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து தீர்மானத்தின்மீது பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் `இதை ஆதரிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தனியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திர என மூன்று மாநிலங்களிலும் எனக்குத் தண்ணீர் கேட்கிற வேலைதான். இதில், நமக்கு உரிமை இருந்தும். சில நேரங்களில் ஓர் அணுகுமுறையை நாம் கையாள வேண்டியிருக்கிறது. மேலே இருக்கிறவர்கள், தண்ணீர் தங்களிடமிருந்து வருகிறது என்பதாலே, தாங்கள் மேல்நிலையில் இருப்பதுபோலவும், நாம் யாசகம் கேட்பதுபோலவும் நினைக்கிறார்கள்.

துரைமுருகன்

உச்ச நீதிமன்றம் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. எல்லாவற்றையும்விட, `விடாக்கண்டன், கொடாக்கண்டனாக’ இருக்கிறது கர்நாடகம். அவர்களிடம் நாம் யாசகம் கேட்கவில்லை. தண்ணீர் கொடு என்றுதான் கேட்கிறோம். ஆனால், எங்களிடமே தண்ணீர் இல்லையென்று கூறுகிறார்கள். இன்றைக்கு கர்நாடகாவிலுள்ள நான்கு அணைக்கட்டுகள் சராசரி தண்ணீர் அளவு 66.226 டி.எம்.சி, அதாவது 57 சதவிகிதம். ஒரு கையளவு தண்ணீர் இருந்தாலும், அதில் நமக்குப் பங்கு உண்டு. அதைக் கொடுத்தாக வேண்டும். நீதிமன்றமே அதைச் சொல்கிறது. உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத ஒருபோக்கு நாட்டில் நிலவுமானால், ஒன்றிய அரசும் இதைப் பார்த்துக் கொண்டிருக்குமானால், பிறகு இந்த தேசிய ஒருமைப்பாடு எங்கே போயிருக்கும்.

எடப்பாடி பழனிசாமி

அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அழுத்தம் கொடுத்தால் மட்டும் கிடைத்துவிடுமா… கிடைக்காது. இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் போடவேண்டும் என்று ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்து அழுத்தம் கொடுத்துப் பார்த்தும், அசையவில்லை டெல்லி. அதுதான் உங்களுக்கும், எங்களுக்கும். எனவே, நம் ஒற்றுமை ஒன்றுதான் இதில் சாதிக்கும். அரசியல் கண்ணோட்டம் வேண்டும்தான். ஆனால், எல்லாவற்றிலும் அரசியல் பார்த்தால் நாம் மனிதனாக இருக்க முடியாது” என்று கூறினார். இறுதியில், பா.ஜ.க வெளிநடப்பு செய்ததுபோக, சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவால் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.