தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் (அக்.16, 17) மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள்,நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

18 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

அக். 15-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு ஆகிய இடங்களில் 17 செ.மீ., முள்ளங்கினாவிளை, களியலில் 16 செ.மீ., குழித்துறையில் 15 செ.மீ., திற்பரப்பு, கோழிப்போர்விளை, கரூர் மாவட்டம் பரமத்தியில் 14 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, ஆனைப்பாளையத்தில் 13 செ.மீ. மழை பதிவானது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.