உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

புனே,

உலகக் கிரிக்கெட்டில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடைபெற்றுவரும் 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதி வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டான்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.

டான்சித் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹசன் சாண்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மெஹதி ஹசன் 3 ரன்னிலும், தவுஹித் ஹரிதாய் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.

கடைசி கட்டத்தில் முஷ்பிகுர் ரஹிம் (38) மற்றும் மகமதுல்லா (36) ஆகியோரின் பங்களிப்புடன் வங்காள அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.