தியேட்டர் ரிலீஸை புறக்கணித்ததால் விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்

லியோ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ் லலித்குமார் படம் வெளியான பிறகு படம் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்படி அவர் கூறும்போது, விக்ரம் நடித்த மகான் பட ரிலீஸ் தொடர்பாக நடிகர் விஜய் தன்னை போனில் அழைத்து திட்டிய சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரே நேரத்தில் விக்ரம் நடித்த கோப்ரா மற்றும் மகான் ஆகிய இரண்டு படங்கள் எனது தயாரிப்பில் இருந்தன. மகான் திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது. கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடியாமல் இழுத்துக் கொண்டே சென்றது. அந்த சமயத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்து விட்டால் பொருளாதார ரீதியாக நான் சற்று ரிலாக்ஸ் ஆகி விடுவேன் என நினைத்தேன். கோவிட் காலகட்டம் முடிந்து மீண்டும் திரையரங்குகள் திறந்த சமயம் என்பதால் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டால் எதிர்பார்த்த கூட்டம் வருமா என்கிற சந்தேகம் இருந்தது.

அதனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் நாம் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றும்போது அதை மிகப்பெரிய அளவில் வெளியிட்டு உங்களது விருப்பத்தை பூர்த்தி செய்வேன் என கூறி சமாதானப்படுத்தி அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன். மகான் படத்தை பார்த்த பிறகு, விஜய் என்னை போனில் அழைத்து இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.. இதை எதற்காக ஓடிடியில் ரிலீஸ் செய்தீர்கள் என திட்டினார்” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் லலித்குமார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.