தூத்துக்குடி, டி.எம்.பி காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான சலவைத் தொழிலாளர்கள் துணி சலவை செய்யும் சலவைக்கூடம் உள்ளது. இந்த சலவைக்கூடத்தின் உட்புறம், திருமந்திர விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் முன்பு ரத்தக்கறை படிந்த ஒரு பை கிடந்தது. நீண்டநேரமாக தனியாக கிடந்த அந்தப்பையை சலவைத் தொழிலாளி ஒருவர் பையை திறந்து பார்த்துள்ளார். பைக்குள் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் தலை கிடந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பிற சலவைத் தொழிலாளிகளிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து தலையைக் கைப்பற்றியதுடன், தலை துண்டிக்கப்பட்டவரின் உடல் எங்காவது உள்ளதா? என, தீவிரமாகத் தேடினர். இதில், அருகே இருந்த சிதம்பரநகர் சுடுகாட்டுப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவரின் உடலை கண்டுபிடித்தனர். தலை மற்றும் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி, மில்லர்புரம் ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன் என்பது தெரிய வந்தது.
இவர், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி, இதே சலவைக்கூடத்தில் வைத்து அண்ணாநகரைச் சேர்ந்த தனது நண்பர் சப்பாணிமுத்து என்பவருடன் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் கோயிலுக்காக விரதம் மேற்கொண்டு மாரியப்பன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை சப்பாணிமுத்து அறுத்ததோடு, அவரின் தாய் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளாராம். இதனையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அங்கேயே தூங்கிவிட்டனர். இந்த நிலையில், பாதி தூக்கத்தில் எழுந்த மாரியப்பன், அங்கு கிடந்த கல்லை தூக்கி சப்பாணிமுத்துவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், தென்பாகம் காவல் நிலையத்தில் மாரியப்பன் சரணடைந்தார்.

இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற மாரியப்பன், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதனிடையே சப்பாணிமுத்துவின் கொலைக்குப் பழிக்குப்பழியாக மாரியப்பனை சப்பாணிமுத்துவின் உறவினர்கள் கொலை செய்துவிட்டு அவரின் துண்டிக்கப்பட்ட தலையை ஏற்கெனவே சப்பாணிமுத்து கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வீசிச் சென்றுள்ளனர் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சப்பாணிமுத்துவின் உறவினர்கள் 2 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.