மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: ராஜஸ்தான் முதல்-மந்திரி வாக்குறுதி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு வழங்கப்படும் எனவும், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி அசோக் கெலாட் உறுதியளித்தார்.

2 வாக்குறுதிகள்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜனதாவும் தீவிரமாக களமாடி வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

இந்த நிலையில் ஜுன்ஜுனுவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முதல்-மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது மாநில மக்களுக்கு 2 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

தவணை முறையில் வழங்கப்படும்

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ‘இதைப்போல 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.