உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

கொல்கத்தா,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து – வங்காளதேசம் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 3 ரன்னிலும், ஓ டவுட் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பாரேசி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று விளையாடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. அக்கர்மேன் 15 ரன்னிலும், டி லீட் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்தார். அவர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரகுமான், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது .

இதில், அதிகபட்சமாக வங்காளதேச அணியின் ஹசான் மிராஸ் 35 ரன்களும், மஹ்முதுள்ளா 20 ரன்களும், மஹெடி ஹாசன் 17 ரன்களும், தன்சித் ஹாசன் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.நஜ்முல், ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் ஒற்றை இலக்கில் ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.இந்நிலையில், வங்காளதேச அணி 42.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதனால் நெதர்லாந்து அணி 87ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.