இந்தியாவுக்கு டபுள் ஹாட்ரிக் வெற்றி – போட்டுத்தாக்கிய ஷமி… நாக்அவுட்டான நடப்பு சாம்பியன்!

IND vs ENG Match Result: நடப்பு உலகக் கோப்பை தொடரில் 29ஆவது லீக் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்தது.

பும்ராவின் டபுள் விக்கெட்

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள், கேஎல் ராகுல் 39 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து, 230 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து ஓப்பனர்கள் பேர்ஸ்டோவ் – மலான் ஆகியோர் களமிறங்கினர். 

ஆனால், இந்திய அணிக்கு வழக்கம்போல் பும்ரா பந்துவீச்சு தாக்குதலை ஆரம்பித்தார். அவர்கள் 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மலானை 16 ரன்களில் இருந்தபோது பும்ரா போல்டாக்கினார். அடுத்த பந்திலேயே ஜோ ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் பும்ரா வெளியேற்றினார். 

ஷமியின் வெறியாட்டம்

அடுத்து பந்துவீச வந்த ஷமி தனது முதல் ஓவரிலேயே ஸ்டோக்ஸை செட் செய்து விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் டக் அவுட்டாகினார்.அடுத்து பட்லர் 10, மொயின் அலி 15 என சொற்ப ரன்களில் முறையே குல்தீப் மற்றும் ஷமியிடம் வீழ்ந்தனர். ஒருமுனையில் லிவிங்ஸ்டன் மிக பொறுமையாக விளையாடினார். கிறிஸ் வோக்ஸை ஜடேஜா 10 ரன்களில் அவுட்டாக்க அடுத்த சில ஓவர்களிலேயே லிவிங்ஸ்டன் 27 ரன்களில் குல்தீப் யாதவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து, அடில் ரஷித்தை ஷமியும், மார்க் வுட்டை பும்ராவும் விக்கெட் எடுக்க இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் ஆல்அவுட்டானது.

இதன்மூலம், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி பந்துவீச்சில் ஷமி 4, பும்ரா 3, குல்தீப் 2 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வானார். 

நாக்அவுட்டான நடப்பு சாம்பியன்

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் முறையே 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளன. இந்த போட்டியில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி அரையிறுதி ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. அந்த அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில், மூன்றிலும் வெற்றி பெற்றால் கூட 8 புள்ளிகளையே அந்த அணி பெறும். இதன்மூலம், அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பில்லை என உறுதியாக கூறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.