
'விக்ரம் 62' – இனி அப்படி நடக்காது என்கிறார் தயாரிப்பாளர்
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அவரது 62வது படத்தை எஸ்யு அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை ஒரு 3 நிமிட வீடியோவுடன் ஒரு திரைப்படக் காட்சி போல வெளியிட்டிருந்தார்கள். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அது குறித்து ஒரு ரசிகர் பாராட்டு தெரிவித்து டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், “இந்த முறை இயக்குனர், எழுத்தாளர் எஸ்யு அருண்குமார் மிகச் சிறந்த பர்பெக்ஷனிஸ்ட். அவர் திட்டமிட்டு, படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்டப் பணிகளையும் சேர்த்து ஒரே வாரத்தில் இதை முடித்துவிட்டார். ஒரு மணி நேர தாமதம் என்பது தயாரிப்பு தரப்பிலும் புரமோஷன் தரப்பிலும் நடந்த ஒன்றுதான். இனி அப்படி நடக்காது,” என இயக்குனர் அருண்குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.