திருமண புகைப்படங்களை வெளியிட்ட வருண் தேஜ், லாவண்யா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி சீனியர் நடிகரான சிரஞ்சீவி தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். அவரும் தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகை லாவண்யா திரிபாதியும் அவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

அங்குள்ள டஸ்கனி என்னும் இடத்தில் உள்ள போர்கோ சான் பெலிஸ் என்ற ரிசாட்டில் நடைபெற்ற அவர்களது திருமண நிகழ்வில், நெருங்கிய குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் சிலவும் அங்கேயே சில நாட்கள் நடைபெற்றது.

பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்கோத்ரா டிசைன் செய்த ஆடைகளை திருமணத்திற்காக தம்பதியினர் அணிந்திருந்தனர். அதில் லாவண்யா அணிந்த காஞ்புரம் பட்டுப் புடவையும் அடங்கும்.

திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்து நாகபாபு, “புதுமணத் தம்பதியருக்கு உங்களது ஆசீர்வாதம் தேவை,” என்று குறிப்பிட்டிருந்தார். நேற்று வருண், லாவண்யா இருவரும் மேலும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். பிரபலங்கள், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நவம்பர் 5ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.