11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 11மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைமண்டல வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (நவ. 8, 9) இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 88-89 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 77-79 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பவானி, கன்னியாகுமரியில் 12 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.