சகாரா குழும தலைவர் சுப்ரதாராய் திடீர் மாரடைப்பால் மரணம்..!

சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவருக்கு வயது 75. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்த சுப்ரதா ராய் சகாரா சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் இருந்து வந்தார்.

மறைந்த சுப்ரதா ராயிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன்கள் இரண்டு பேரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். சுப்ரதாவின் உடல் நாளை லக்னோவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று சத்யா பவுண்டேசன் செயலாளர் சேதன் தெரிவித்துள்ளார்.

பீகாரை பூர்வீகமாக கொண்ட சுப்ரதா ராய் 1978-ம் ஆண்டு சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை வெறும் 2000 ரூபாயில் ஆரம்பித்தார். சுப்ரதா ராய் குடும்பம் பின்னர் லக்னோவிற்கு இடம் பெயர்ந்தது. இதையடுத்து தனது கம்பெனியின் தலைநகரத்தை லக்னோவிற்கு மாற்றிக்கொண்டார் சுப்ரதா ராய். சிட்பண்ட், ஏர்லைன்ஸ், டிவி, மீடியா, ரியல் எஸ்டேட், கல்வி, சுற்றுலா என்று அவர் கைவைக்காத தொழிலே கிடையாது. ஆனால் சுப்ரதா ராய் 2010-ம் ஆண்டுகளில் நிதி நெருக்கடியில் சிக்க ஆரம்பித்தார்.

சுப்ரதா ராய்

சிட்பண்ட் மோசடி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த சகாரா நிறுவனம் பொது மக்களிடம் சட்டவிரோதமாக டெபாசிட்களை பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சகாரா நிறுவனத்திடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும்படி அமலாக்கப்பிரிவு மற்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து சகாரா நிறுவனம் தொடர்ந்து கோர்ட் வழக்குகளை சந்தித்தது.

2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய் 2016-வது ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்த போது ஐந்து ஆயிரம் கோடி ரொக்கமாகவும் ஐந்து ஆயிரம் கோடி வங்கி உத்தரவாதமாகவும் செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிதியை திரட்ட வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய சுப்ரதா ராயிக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

சகாரா இந்தியா பரிவார்

10 ஆயிரம் கோடி ஜாமீன் தொகையை கொடுக்க முடியாமல் பல மாதங்கள் சிறையில் இருந்தார். 20 ஆயிரம் கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்து இருப்பதாக சகாரா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. சுப்ரதா ராய் தனது இரண்டு மகன்களுக்கும் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடத்தியது பெரிய அளவில் பேசப்பட்டது.

சமீபத்தில் சகாரா முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப கேட்டு விண்ணப்பித்தால் 45 நாளில் திரும்ப பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. சுப்ரதா ராய் மரணத்திற்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.