IPL Auction 2024, Chennai Super Kings: ஐபிஎல் தொடரில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும் நிலையில், இடைப்பட்ட ஆண்டுகளில் மினி ஏலம் நடைபெறும். அந்த வகையில், இந்த வருடத்திற்கான மினி ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் (IPL Mini Auction) வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது. குறிப்பாக, ஐபிஎல் ஏலம் முதல் முறையாக துபாயில் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள கோக்கோ கோலா ஏரினாவில் இந்த ஏலம் நடைபெற உள்ளது.
மேலும், ஒரு அணி மொத்தமாக தனது அணியை கட்டமைக்க அதிகபட்சம் 25 வீர்ரகளை உள்ளடக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வீரர்களையாவது வைத்திருக்க வேண்டும். மேலும், இந்த வீரர்களை வாங்குவதற்கு அந்த அணி மொத்தமாக இதுவரை ரூ.95 கோடிதான் செலவிட இயலும். அந்த வகையில், தற்போது ரூ.5 கோடி அதிகரித்துள்ள நிலையில், ரூ.100 கோடிவரை அணி வீரர்களுக்கு செலவிடலாம்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி கடந்த மெகா ஏலத்திலும், மினி ஏலத்திலும் செலவிட்டது போக மொத்தம் ரூ.1.5 கோடி மீதம் (CSK Purse Amount) உள்ளது. இந்த நிலையில் வரும் சீசனில் சில வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ளது, அதுமட்டுமின்றி பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு செலவிட்ட ரூ.16.25 கோடியும் ஏலத்தில் சேர்ந்துவிடும் என்பதால், சுமார் ரூ.30 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும் எனலாம்.
நவ.26ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் விடுவிக்க உள்ள வீரர்கள், தக்கவைக்க உள்ள வீர்ரகள் என Retention பட்டியலை இறுதிசெய்ய வேண்டும். அதன்படி, உள்பட மொயின் அலி, சிசாண்டா மகாலா, கைல் ஜேமீசன், ராயுடு, சிம்ரன்ஜித் சிங், ஷேக் ரஷீத் உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே, நிச்சயம் ரூ.30 கோடிவரை சென்னைக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே, சென்னை இரண்டு பெரிய வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களை வாங்க திட்டமிடலாம். குறிப்பாக, பாட் கம்மின்ஸ், ரஸ்ஸல், டேரில் மிட்செல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் போன்றவர்களை தூக்க திட்டமிடலாம்.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மொத்தம் 5 கோப்பைகளை வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த தொடர்தான் இறுதி தொடராக அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் கடைசி முறை கோப்பையை வெல்ல தோனி அதிக முன்னெடுப்புகளை எடுப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில், வரும் ஏலத்தில் இரண்டு தரமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் சிஎஸ்கேவுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்க வாய்ப்புள்ளது.