'சலார்' படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமவுலி

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படம் அடுத்த வாரம் டிசம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்காக இதுவரையிலும் எந்த ஒரு பெரிய அளவிலான புரமோஷன் நிகழ்வுகளையும் நடத்தவில்லை. எந்த ஊருக்கும் படக்குழுவினர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் படக்குழுவினர் ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள். படத்தின் முதல் டிக்கெட்டை வெளியிடும் நிகழ்ச்சிதான் அது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா 70எம்எம் தியேட்டரில் திரையிட உள்ள முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை ராஜமவுலி படக்குழுவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிருத்விராஜ், தயாரிப்பாளர் நவீன் எர்னேனி ஆகியோர் கலந்து கொண்டனர். படக்குழுவினரை ராஜமவுலி வீடியோ பேட்டி எடுக்கும் போது இந்த டிக்கெட் வெளியீட்டு நிகழ்வையும் நடத்தியுள்ளனர்.

'சலார்' படக்குழுவை ராஜமவுலி பேட்டி எடுக்கும் வீடியோ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.