கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் அனுமதி இன்றி கொடைக்கானலில் பங்களா கட்டி இருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இருவரும் நவீன சொகுசு பங்களா கட்டி வருகின்றனர். மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில் முறையான கட்டிட வரைபட அனுமதியுடன் தான் கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஆனால், இருவரும் முறையான அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு கட்டுமான விதிகளுக்கு எதிராக கட்டிட பணிகள் நடந்து வருகிறது. மண் சரிவு ஏற்படக் கூடிய மலைப்பகுதிகளில் விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஜேசிபி மற்றும் பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மலைகளை குடைகின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, அனுமதியற்ற, விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து முறையாக விசாரித்து இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து அரசு தரப்பில், பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு சொந்த இடம் இருப்பதாகவும், அதில் உரிய அனுமதி இன்றி கட்டிடம் கட்டப்படுள்ளதாகவும், இது தொடர்பாக இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர், வில்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அடுத்த விசாரணையை ஜன. 2ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.