திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கின்றன. வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வேட்டி, சேலைகள் சேதமடைந்துள்ளன.
ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த தண்ணீர்: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோர பகுதிகளில் குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள்ளும் தண்ணீர் புகுந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அவசரகால செயல் மையம், குழந்தைகள் உதவி மையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.