கொலை படம் எடுப்பவர்கள் கொலைகாரர்கள்: தங்கர் பச்சான் தாக்கு

கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளித்து புகழ்பெற்றவர் டாக்டர் கே.வீரபாகு. அவர் இயக்கி தயாரித்து, நடித்துள்ள படம் 'முடக்கறுத்தான்'. இந்த படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தை கருவாக வைத்து தயாராகியுள்ளது. மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் தங்கர் பச்சான் பேசியதாவது: டாக்டர் வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றி உள்ளார். இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்துள்ளார். அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை. தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்போது சினிமா என்கிற அற்புதமான கலை, வியாபாரமாக பார்ப்பவர்கள் கையில் சிக்கி உள்ளது. எந்த படத்தை குழந்தைகளுக்கு காட்ட கூடாதோ, மனதை சிதைக்கிறதோ அந்த படங்களை ஊக்குவிக்கிறார்கள். நல்ல படங்களை பார்ப்பது இல்லை. படத்தில் ஐம்பது கொலைகள் இருந்தால் நடிகருக்கும் இயக்குனருக்கும் அதிக சம்பளம்.

கொலைகளை வைத்து படம் எடுக்கும் எல்லோரும் கொலைகாரர்களே. சினிமாவை ஒரு கொள்ளையடிக்கும் தொழிலாக வைத்துக்கொண்டு மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று சிந்திக்கும் ஒரு கூட்டம் உள்ளது. இது பெரிய குற்றம். கொலைகளை ரசிக்கும் மன நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டனர். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.