பெங்களூரு,அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து ஆர்வலர், 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவில் பா.ஜ.,வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1992ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுதும் போராட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பூஜாரி, 51, என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண வேண்டும் என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா சமீபத்தில் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஸ்ரீகாந்த் பூஜாரி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த போலீசார், 31 ஆண்டுகளுக்கு பின் அவரை கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மாநில பா.ஜ.,வினர் நேற்று பெங்களூரு, ஹூப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ”ஹிந்துக்களின் மத உணர்வை, காங்கிரஸ் அரசு தொடர்ந்து புண்படுத்துகிறது.
”இந்த மாதம் அயோத்தி யில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், திட்டமிட்டே ஹிந்து ஆர்வலர் 31 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
”ஹிந்து மதத்தின் மீது பற்றுள்ள பலரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement