
மாலத்தீவு புகைப்படத்தை உடனடியாக நீக்கிய ரன்வீர் சிங்
கடந்த சில நாட்களாகவே மாலத்தீவு குறித்த சர்ச்சையான விஷயங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றன. குறிப்பாக மாலத்தீவில் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் நமது பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து வந்த சில நாட்களில் பிரதமர் மோடி நம் நாட்டிற்கு சொந்தமான லட்சத்தீவிற்கு பயணம் செய்து அந்த இடத்தின் சுற்றுலா குறித்து அனைவருக்கும் தெரியுமாறு வைரல் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து வழக்கமாக விடுமுறை நாட்களை கழிக்க மாலத்தீவிற்கு செல்லும் நமது திரையுலக பிரபலங்கள் பலரும் மாலத்தீவை விமர்சித்தும் அதற்கு பதிலாக லட்சத்தீவை புரமோட் செய்யும் விதமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் லட்சத்தீவு குறித்து புகழ்ந்து பேசி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதே சமயம் அந்த பதிவில் அவர் மாலத்தீவிற்கு சென்றிருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் வெளியிட்டு இருந்தார். இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டலடிக்க தொடங்கினர். இதையடுத்து உடனே அந்த புகைப்படத்தை தனது பதிவிலிருந்து நீக்கிவிட்டார் ரன்வீர் சிங்.