Supreme Court says cant pause law on Election Commissioners appointments | தேர்தல் கமிஷனர்கள் நியமனம் குறித்த புது சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

தொடர்ந்து, மத்திய அரசு சமீபத்தில் பார்லிமென்டில், இது தொடர்பாக மசோதா ஒன்றை கொண்டு வந்தது. அதில், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் அமையும் குழுவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவார் எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது.

இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மத்திய அரசு சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இச்சட்டம் அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது. இதனால் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் நீதிபதிகள், ‛‛ எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல், தடை விதிக்க முடியாது” எனக்கூறி மத்திய அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.