Body of shot dead model found in canal after 10 days | சுட்டு கொல்லப்பட்ட மாடல் அழகியின் உடல் 10 நாளுக்கு பின் கால்வாயில் மீட்பு

சண்டிகர்:ஹரியானாவில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா உடல், பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் ‘சிட்டி பாயின்ட்’ என்ற ஹோட்டலுக்கு, முன்னாள் அழகி திவ்யா பஹுஜா, கடந்த 2ம் தேதி ஐந்து பேருடன் வந்தார்.

ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங், 56, என்பவர், திவ்யாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தன் ஆபாச படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டியதால், திவ்யா பஹுஜாவை, அபிஜீத் சிங் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திவ்யா பஹுஜா உடலை வெள்ளைப் பேப்பரில் சுருட்டி, அபிஜீத் சிங் காரில் எடுத்துச் செல்வதும், பின் அந்த காரை பல்ராஜ் கில் என்பவரிடம் ஒப்படைப்பதும் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோல்கட்டா விமான நிலையத்தில், பல்ராஜ் கில் நேற்று முன் தினம் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரவி பங்கா என்பவர் உதவியுடன், திவ்யா பஹுஜா உடலை கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

பதேஹாபாத் மாவட்டம் தோஹானா என்ற இடத்தில் உள்ள பக்ரா கால்வாயின் துணைக் கால்வாயில் இருந்து, திவ்யா பஹுஜா உடல் நேற்று மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ரவி பங்காவை போலீசார் தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.