சமீபத்தில் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்தின் மரணம்.
கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், தமிழக முதலைமைச்சர் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், பிரதமர் மோடியும், அகில இந்திய தலைவர்களும் விஜயகாந்தை நினைவுகூர்ந்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினார்கள்.

கடந்த ஒரு வாரமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்தை நேரிலும், சினிமாவிலும் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் பல்வேறு வகைகளில் தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.தமிழகத்தில் இன்றுவரை ஏதாவதொரு இடத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு புகழ்பாடும் கூட்டங்களும் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் அவர் பிறந்த மதுரையில் அவர் இழப்பின் சோகம் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. அவருடன் ஆரம்பகாலத்தில் இருந்தவர்களும், அவரால் கைதூக்கி விடப்பட்டவர்களும் மதுரையில் அதிகம் உள்ளனர். அவர்கள் விஜயகாந்தின் புகழை பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த வகையில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள காசி திரையரங்கத்தினர் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை கடந்த ஒருவார காலமாக மக்களுக்கு இலவசமாகத் திரையிட்டு தங்கள் அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்த் திரையுலகில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவருடைய படங்கள் ஏ சென்டர்களைத் தாண்டி, பி மற்றும் சி சென்டர்களில் நன்றாக ஓடி திரையரங்கு நடத்துபவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் வருமானத்தை அள்ளிக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் மதுரைப்பகுதியில் விஜயகாந்த் படங்களை விநியோகம் செய்து வளர்ந்தவர்கள் காசி பிலிம்ஸ் நிறுவனத்தினர். அதை மறக்காமல் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தங்களது காசி திரையரங்கத்தில் பேரரசு திரைப்படத்தை ஒரு வாரத்துக்கு மக்களுக்கு இலவசமாகத் திரையிட்டு வருகிறார்கள்.
நாம் காசி திரையரங்குக்குச் சென்றிருந்தோம். சிரித்தபடி பேரரசு பட போஸ்டரில் வரவேற்றுக் கொண்டிருந்தார் கேப்டன். திரையரங்க உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால் ஊழியர்களிடம் பேசினோம், “எங்கள் முதலாளி ஆரம்ப காலங்களில் கேப்டன் படங்களை ரீலீஸ் செய்தவர். அவர் மீது அதிக மரியாதை கொண்டவர். கேப்டனின் மறைவு எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அவருக்கு நாங்கள் செய்யும் திரை அஞ்சலிதான் இது. தினமும் நான்கு காட்சிகள் மக்களுக்கு கட்டணம் வாங்காமல் காட்சிப்படுத்தி வருகிறோம். மக்களும் ஆர்வமாக வருகிறார்கள்” என்றார்.
கேப்டனுக்கு பேரன்பு அஞ்சலி..!