சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) கௌரவ ஸாவோ லெஜி (Zhao Leji) அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

மேலும், இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ‘ஒரே சீனா’ கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ‘ஒரே சீனா’ கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.