ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி

ஜெய்ப்பூர்: காய்ச்சல் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கடும் காய்ச்சல் காரணமாக நேற்று (பிப்.02) நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று மற்றும் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்ததால் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

தற்போது ஆக்சிஜன் உதவியுடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக அசோக் கெலாட் தனது எக்ஸ் பதிவில், “கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில், எனக்கு கரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு என்னால் யாரையும் சந்திக்க இயலாது. மாறிவரும் பருவநிலையில், மக்கள் அனைவரும் தங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.