“தேர்தல் முடிந்ததும் பாஜகவில் ஓபிஎஸ் இணைந்து விடுவார்” – ஜெயக்குமார் கணிப்பு

சென்னை: “தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸ்ஸின் குரல் இருக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸின் குரல் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. பாஜக இல்லாத ஒரு ஒரு மகத்தான கூட்டணி அதிமுக சார்பில் அமையும்.

இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில், அனைத்தையும் பொறுத்திருந்து பாருங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால், திமுக அரசு, அதற்கு மூடுவிழா செய்துவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை வழங்கினார்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தேர்தலை தனித்து சந்தித்து இருக்கிறார்கள், அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். கூட்டணி அமைத்துதான் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது. அதற்காக கூட்டணி இல்லை என்று சொல்ல வேண்டாம். இன்னும் நாட்கள் இருக்கின்றன.

எங்களுடைய தனித்தன்மையை பல கட்டங்களில் நிரூபித்து இருக்கிறோம். பாஜவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலையை எடுத்து விட்டோம். தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். எங்களை நோக்கிதான் கட்சிகள் வரும்” என்றார் ஜெயக்குமார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.