தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 27) முதல் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மார்ச் 31 மற்றும் ஏப்.1-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மார்ச் 27 (இன்று) முதல் வரும் 30-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.