கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு… தற்கொலை செய்த வாலிபர்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை குருதாம்கோட்டில் வசித்தவர் வாசு. இவருடைய மனைவி ரீஜா (வயது38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாசு, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.

இந்தநிலையில் ரீஜாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரமோத் (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ரீஜா தனது 2 குழந்தைகளுடன் பிரமோத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ரீஜா காட்டாக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரமோத்தை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த பிரமோத் தனியாக வாழ்ந்து வந்தார். ஆனாலும் ரீஜா தினமும் அவருக்கு சாப்பாடு கொடுத்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ரீஜா சாப்பாடு கொடுப்பதற்காக பிரமோத் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரமோத் ரீஜாவை தாக்கி கீழே தள்ளினார். தொடர்ந்து கத்தியால் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்தார். இதில் ரீஜா பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பிரமோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே ரீஜாவை காணவில்லை என அவரது உறவினர்கள் காட்டாக்கடை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிரமேத்தின் வீட்டில் ரீஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், பிரமோத் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையிலும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காட்டாக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.