மது ஒழிப்பு: “ஆம், அவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் விசிக-வால் பேச முடியும்!" – திருமாவளவன்

பி.முருகசாமி இயக்கி, ஜூ ஸ்மித் இசையில், லிசி ஆண்டனி, புதுப்பேட்டை சுரேஷ், ராட்சசன் சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் குயிலி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மது ஒழிப்பு போராட்டம்

அப்போது, “வணிக நோக்கம் கடந்து மக்களுக்கு நல்லதை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் குயிலி திரைப்படத்தையும், அதன் இயக்குனரையும் பாராட்டுகிறேன். சமீபத்தில் எங்கள் கட்சி சார்பில் லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். அது பேசுபொருளானது. தமிழ்நாட்டில் மட்டும் மது ஒழிப்பு சாத்தியமில்லை.

குயிலி திரைப்பட ஆடியோ வெளியீடு

இங்கு மதுக்கடைகளை மூடிவிட்டால், அண்டை மாநிலங்களிலிருந்து மது திருட்டுத்தனமாக வரும். நாடு தழுவிய மது ஒழிப்புதான் அவசியம். இதை மக்களவையில் பேசினேன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இளைஞர்களும், மக்களும் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்ற பரந்த பார்வை நமக்கு உண்டு. மகாத்மா காந்தியை கொள்கை தலைவராக ஏற்றிருக்கிறோம். அவரின் உருவப் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிடுகிறோம்.

யாருக்கும் அஞ்சவில்லை

ஆனால் அவரின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று மது ஒழிப்பு. அதை பொருட்படுத்துவதில்லை. ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பார்த்துக்கொள்ளட்டும் என்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் இதை வருமானத்துக்கான வழியாக பார்க்கிறது. யார் எப்படி கெட்டுப்போனால் எனக்கென்ன என இருக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அங்கேயே இரண்டு நாள்கள் தங்கி மதுவுக்கு எதிராகப் பேசினோம்.

மது மட்டுமல்ல, போதை பொருள்களின் நடமாட்டமும் அதிகரித்திருக்கிறது. இது எல்லாவற்றுக்கும் எதிராக மது ஒழிப்பு மாநாடு நடத்தினோம். மது ஆலை வைத்திருப்பவர்களை மேடையில் வைத்துக்கொண்டு மது ஒழிப்பு பேசுகிறோம் என விமர்சித்தார்கள். ஆம், அவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் மது ஒழிப்பு குறித்து பேச விசிகவால் முடியும் என்பதை நிரூபித்தோம்.

குயிலி திரைப்பட ஆடியோ வெளியீடு

யாருக்கும் அஞ்சவில்லை. ஆளும் கட்சியை மேடையில் அமரவைத்து, மதுக் கடைகளை மூடுவோம் என்ற அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற அழுத்தம் கொடுத்தோம் என்பதுதான் உண்மை. தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கிறேன். பல சமூகத்தை சேர்ந்தவர்களும் மதுவால் பாதிக்கப்பட்டு, சுய நினைவை, குடும்பத்தை இழந்து நிற்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது வருத்தமாக இருக்கியது.

மது ஒரு பேரவலம்

இந்த ஆட்சி, அந்த ஆட்சி என ஆட்சியாளர்களை குறை சொல்லாமல் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. மது கடைகளை மூடிவிட்டு, மணல் – கல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தலாமே என்ற ஆலோசனையை ராஜன் கூறினார். முதல்வரிடம் இது குறித்து பேசியபோது அவருக்கும் இதில் வருத்தம் இருக்கிறது. தனியார் மயம் கூடாது, அந்நிய முதலீடு கூடாது என விரும்புகிறோம். ஆனால், அதை எதிர்த்து நம்மால் வெற்றிப் பெற முடியவில்லை.

அதுபோல்தான் இந்த சிஸ்டம் இருக்கிறது. அப்படிதான் மது ஆலைகள் நமது விருப்பத்துக்கு மாறாக நிறுவப்பட்டிருக்கிறது. அதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். அதற்காக மூலப்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல ஆயிரம் கோடியில் மது ஆலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தில் உயிரிழப்புக்குப் பிறகுதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. எனவே ஒரு கட்சியால், இயக்கத்தால் மது ஒழிப்பு சாத்தியமில்லை. எனவே, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். விவசாயிகளின் போராட்டம் போல ஒரு போராட்டம்தான் அதை சாத்தியமாக்கும். மது ஒரு பேரவலம். எல்லா இலவசங்களையும் நிறுத்திவிட்டு, கல்வியை இலவசமாக கொடுக்கும் அரசு இதற்கும் ஒரு முடிவுகட்ட வேண்டும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.