புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் கொல்லப்பட்டனர், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு நாடாளுமன்றம் கூடுவது இதுவே முதல் முறை ஆகும்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விதிகளின் கீழ், மழைக்கால கூட்டத்தொடரின் போது அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை இந்த அமர்வின் முக்கிய விவாதப் புள்ளிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.