கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது.
650க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் உடன் கொழும்பிலிருந்து மும்பை நோக்கி இந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்ததாக கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் அடையாளம் காணப்பட்ட அந்த கப்பலில் இருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக பேரிடர் மேலாண்மை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் இருக்கும் பணியாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்கு பிறகு காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க கண்ணூர், கோழிக்கோடு மற்றும் கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகள் குறித்தும் மீட்பு நடவடிக்கைகளின் துரிதம் குறித்தும் இன்னும் உறுதிப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கடலோர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன கொள்கலன்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.