நீதிபதி வர்மா வீட்டில் பணக்கட்டுகள் இருந்தது உண்மை: விசாரணைக் குழு அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி வர்மாவின் டெல்லி இல்ல கிடங்கில் அதிக அளவில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, கடந்த மார்ச் 14-15 அன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், கிடங்கினுள் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்ததைக் கண்டு உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் ஷீல் நாகு, ஜி.எஸ். சந்தாவாலியா, அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மே 3-ஆம் தேதி நியமித்தது. இக்குழு தனது விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தானாக முன்வந்து பதவி விலக மறுத்ததால், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தான் ஓய்வு பெறும் முன் மே 13-ஆம் தேதி இந்த அறிக்கையை குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு ரகசியமாக அனுப்பினார். தற்போது இந்த அறிக்கை, சட்ட வலைத்தளமான ‘தி லீஃப்லெட்’ மூலம் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள கிடங்கில் மார்ச் 14-15 அன்று எரிந்த நிலையில் பணம் கண்டெடுக்கப்பட்டது. எனினும், இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் விவகாரத்தில் காவல் துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் “அஜாக்கிரதையாக” செயல்பட்டுள்ளனர்.

பிரச்சினையின் உணர்திறன் மற்றும் சம்பவம் நடந்த நேரத்தில் நீதிபதி வர்மா அவரது வீட்டில் இல்லாதது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி உயர் காவல் துறை அதிகாரிகள் தங்கள் செயலற்ற தன்மையை விளக்க முயன்றனர். தீ விபத்து நடந்த இரவில் நீதிபதி வர்மாவும் அவரது மனைவியும் விடுமுறை பயணமாக போபாலில் இருந்தனர்.

பயன்படுத்தப்படாத வீட்டுப் பொருட்கள் மற்றும் மதுபான அலமாரிகளை வைக்கப் பயன்படுத்தப்பட்ட சேமிப்பு அறையில் தான் தீ விபத்து ஏற்பட்டு, அங்குதான் பணக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த அறை நீதிபதி வர்மா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே, சேமிப்பு அறையில் இருந்த எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருளுக்கும் நீதிபதி வர்மா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களே பொறுப்பு.

தீயை அணைக்கும் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக் கட்டுகள், சிறிய மதிப்புள்ளவை அல்ல. நீதிபதி வர்மா அல்லது அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் அவற்றை சேமிப்பு அறையில் வைத்திருக்க முடியாது.

சதித்திட்டத்துக்கு இலக்காகி இருப்பதாக கூறும் நீதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. நீதிபதி வர்மாவுக்கு நடந்தது உண்மையில் ஒரு “சதி” என்றால், டெல்லி அலகாபாத்தில் இருந்து தனது இடமாற்றத்தை ஏன் ஏற்றுக்கொண்டார். ஏன், காவல் துறையிலோ அல்லது இந்திய தலைமை நீதிபதியிடமோ அல்லது டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமோ புகார் அளிக்கவில்லை.

நீதிபதி வர்மாவின் நம்பகமான ஊழியர்களால் எரிந்த பணம் மார்ச் 15 அதிகாலையில் சேமிப்பு அறையிலிருந்து அகற்றப்பட்டது என்பதை வலுவான அனுமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தின,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் நடைபெற உள்ள மழைக்கால அமர்வின் போது நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.