லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே உள்ள பன்சங்கலி கிராமத்தை சேர்ந்தவர் சகீல் (வயது 55). தொழில் அதிபரான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் தனது 17 வயது மகனுக்கு, பக்கத்து ஊரில் பெண் பார்த்து வந்தார் சகீல். பெண் வீட்டார் முதலில் சம்மதிக்கவில்லை. பின்னர் சகீல் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து திருமண நிச்சயமும் செய்து வைத்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்து சில தினங்களில் சகீலின் மகன், தனது தந்தையின் செல்போனை தற்செயலாக எடுத்து பார்த்தார். அதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது தந்தை விரசமாக பேசிய ஆடியோக்கள் பதிவாகி இருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இனி நான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பெண்ணை சகீல் திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பாக சகீலின் மனைவி, போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சகீலின் மனைவி ஷபானா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது கணவர் இளம் பெண்ணுடன் வீடியோ அழைப்பில் நீண்ட நேரம் செலவிடுவதைக் கவனித்தபோது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் நாள் முழுவதும் அவளுடன் பேசுவார். நான் அவர்களை இரண்டு முறை ஒன்றாகப் பிடித்தேன். நாங்கள் அவரை கேள்வி கேட்டபோது அவர் என்னையும் என் மகனையும் அடித்தார். அவர் எனது குடும்பத்தை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 17 கிராம் தங்கத்தையும் எடுத்துச் சென்று விட்டார்” என்று அவர் தெரிவித்தார்.