4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி 2, பாஜக, காங்., டிஎம்சி தலா 1 தொகுதிகளில் வெற்றி

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, குஜராத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

குஜராத்தின் காடி தனித்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 60,290 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், 3090 வாக்குளைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கிரித் படேல், 58,388 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பாரியா 5501 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள பாஜக வேட்பாளர் ஜீவன் குப்தா 20,323 வாக்குகள் பெற்றுள்ளார்.

கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அர்யாதன் சவுகத் 77,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜைவிட 11,077 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்வராஜ் 66,660 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்குகளுடன் 4-ம் இடம் பிடித்துள்ளார். அன்வர் என்ற சுயேட்சை வேட்பாளர் 19,760 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் இடைத்தேர்தலில் டி.எம்.சி வேட்பாளர் அலிஃபா அகமது 1,02,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 50,049 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 52,710 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தின் ஷேக் 28,348 வாக்குகள் பெற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.