நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா, ‘ஓ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றி மாறன் உள்பட பலரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நமக்கு ஒரு அண்ணன் இருப்பது எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த வகையில் நான் ரொம்ப லக்கி. நான் சினிமாத் துறைக்குள் வரும்போது, தமிழ் திரைத்துறையே சேர்ந்து என்னை வரவேற்றது.
நிறையப் பேர் வீட்டிற்கு வந்து வாழ்த்தி, அன்பு கொடுத்தார்கள். சினிமாவுக்கு புதிதாக வருபவர்களுக்கு அந்த அன்பைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்த வகையில், ருத்ராவுக்கு (விஷ்ணு விஷாலின் சகோதரர்) வாழ்த்துகள். அவர் உதவி இயக்குநராகவும் இதற்கு முன்பு வேலை பார்த்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே, ஜாலியான ஒரு படமாக இருக்கும் என்று தெரிகிறது.
மக்கள் இன்று தியேட்டருக்கு வந்து ஜாலியான படங்கள் பார்க்க விரும்புகிறார்கள். நல்ல வகையில் அந்த நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
(சிரித்துக்கொண்டே…) வெற்றி மாறன் சார் எல்லோரையும் சீரியஸ் ஆக்கிவிட்டார். அதில் இன்ஸ்பயர் ஆகி, எல்லோரும் சீரியஸான படங்கள் பண்ணுகிறார்கள்.

இந்தப் படத்தின் டீசர் ப்ரஷ்ஷாக இருந்ததும், படத்தின் இயக்குநர் யார் என்று கேட்டேன். அப்போதான் இந்தப் படத்தை எடுத்தது கிருஷ்ணா என்று சொன்னார்கள்.
நான் உதவி இயக்குநராக இருக்கும்போது, கிருஷ்ணா நடிகராக இருந்தார். ஒரு விஷயம், வாழ்க்கையில் நாம் எந்த விஷயத்தைப் பண்ணினாலும், அதை லவ் பண்ணி பண்ண வேண்டும்.
நமக்குத் தேவையான விஷயத்துக்காக நாம் உழைத்துக்கொண்டே இருந்தால், நிச்சயமாக நமக்கு பலன் கிடைக்கும்,” என்றார்.