திருப்புவனம்: காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:காவல் துறையினர் சட்டப்படி செயல்படாமல், கொடூரமான முறையில் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், திமுக ஆட்சி வீழ்ச்சியடைவது உறுதி. காவல் துறை அதிகாரிகளின் விருப்பப்படியே இந்த ஆட்சி நடக்கிறது. அஜித்குமார் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வராக வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். ஆனால், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததாகத்தான் வரலாறு இருக்கிறது. பறிக்கப்பட்ட அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்பதற்காகக்தான் நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.