தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தோட்டக்கலை துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்துள்ள மனுவை எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.