திருமலை: ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் வசித்த ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ், ஏழுமலையானின் தீவிர பக்தர் ஆவர். அவர் தனது இறப்புக்கு பிறகு தனது வீடு மற்றும் வங்கி சேமிப்பை ஏழுமலையானுக்கு வழங்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் உயிலின் நகலை அவரது உறவினர்கள் நேற்று திருமலைக்கு வந்து, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரியிடம் ஒப்படைத்தனர்.
பாஸ்கர் ராவின் 3,500 சதுரஅடி வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். அவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.66 லட்சம் சேமித்து வைத்திருந்தார். வீட்டை ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் சேமிப்பு பணத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். உயிலின்படி சொத்துகளை ஒப் படைத்த பாஸ்கர் ராவின் உறவினர்களை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெகுவாக பாராட்டினார்.