முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது குறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15 நபர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு டிராக்டரில், வெற்றிமாலை கண்மாய் கரையருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கண்மாய் கரையில் உள்ள சாலையில் இருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பொன்னம்மாள் (68) ராக்கி (62), முனியம்மாள் (55) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.