சென்னை: தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும், பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவும் ரூ.23.40 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேலோ இந்தியா இளையோர் மும்முறை தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ்.ரவிபிரகாஷுக்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்துக்கான நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் வழங்கினார்.
அப்போது 39-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜே.கோகுல் பாண்டியனுக்கு தடகள விளையாட்டு உபகரணம் வாங்குவதற்காக ரூ.70 ஆயிரம், மாநில, தேசிய அளவிலான பாரா தடகளப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற லோகேஷுக்கு உயர்ரக பாரா தடகள உபகரணம் வாங்குவதற்காக ரூ.7.20 லட்சம், சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர்.தீபிகா ராணி ராமநாதன், வெள்ளி பதக்கம் வென்ற டி.சரவணகுமார், கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜி.அவிநாஷ் ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சம் என 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.13.40 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.
பின்னர் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 போட்டியை நடத்த மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் அமைப்புக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.