பிரதமர் மோடி முன்னிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி அந்த பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட என்டிஏ சார்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.